Showing posts with label viyan. Show all posts
Showing posts with label viyan. Show all posts

Saturday, January 16, 2021

பொங்கல் வாழ்த்து அட்டைகள் 2021

 இந்த ஆண்டும் பொங்கல் விழாவிற்கு வாழ்த்து அட்டைகளை வரைந்து அனைவருக்கும் அனுப்ப முடிவு செய்தோம்.

இம்முறை அஞ்சல் அட்டைகள் 25 பைசாவிற்கே கிடைத்தது. நம்ப முடியவில்லை அல்லவா? சாதாரண அட்டை 50 பைசா. பாதி பக்கம் விளம்பரத்துடன் உள்ள அட்டை 25 பைசா. 

30 ரூபாய்க்கு 120 அட்டைகள் வாங்கினேன். குழந்தைகள் ஒரு பக்கம் மட்டும் வரைந்தால் போதும்.


வீட்டில் சிறார்கள் எண்ணிக்கை அதிகம். அவர்கள் வரைந்து தள்ளி, வீணாக்கியது போக, அவர்களுக்குள்ளேயே பரிமாறியது போக, அவர்களே தபால்காரராக மாறி, வீடுகளுக்கு தந்தது போக, நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்ப ஓரளவு தேறின.


ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 வாழ்த்து அட்டைகள் உருவாக்கி அனுப்புவோம். அவர்கள் எளிதில் வரைத்து விடுகின்றனர். 50 முகவரிகள் எழுதுவதற்குத்தான் எனக்கு நாக்கு தள்ளிவிடும். பள்ளிக்காலங்களில் பல நூறு பக்கங்கள் எளிதில் எழுதித்தள்ளிய எனக்கு, சில முகவரிகள் எழுதவே கை வலிப்பது காலக்கொடுமை. இம்முறை அனைவரது முகவரியையும் glabels என்ற கட்டற்ற மென்பொருள் மூலம் தாளில் அச்சிட்டு, வெட்டி, அட்டைகளில் எளிதில் ஒட்டினேன்.

glabels.org  இந்த முகவரியில் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யலாம். முகவரிகளை ஒரு Spreadsheet ல் எழுதி Tab Separated Value (TSV) கோப்பாக சேமிக்க வேண்டும். பின் அதை glabels ல் இறக்கி, லேபிள் வடிவமைத்து, பின் PDF ஆக மாற்றினேன். அருகில் உள்ள இணையக்கடையில் அச்சிட, அங்கேயே அளவாக வெட்டியும் தந்தார்கள்.

ஓரளவு நன்றாக உள்ள வாழ்த்து அட்டைகளை வியன், இயல், எரிக், கலை தேர்ந்தெடுத்தனர். அவற்றில் முகவரிகளை ஒட்டினர். பின் அவற்றை தபால் பெட்டியில் போடும் வைபவம். நான், நித்யா, வியன், இயல், பாரி, தோஷிதா, சாய் கிருபா ஆகியோர் ஊர்வலமாக அஞ்சலகம் போனோம். ஒவ்வொருவராக அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட, ஒருவர் பெட்டியின் பூட்டை ஆட்டி, திறக்க முயன்றார். சத்தம் கேட்டு அஞ்சல் அலுவலர் வந்து, எங்களைக் கண்டு சிரித்து விட்டுப் போனார்.



பின் அருகில் உள்ள சிறு பண்ணை வீட்டில் வளர்ந்து வரும் சேவல், கோழிகளை வேடிக்கை பார்த்தோம். வியன் அருகில் உள்ள மரம் மீது ஏறக்கற்றான். 


 


 

பின், வீடுகளில் இருந்து எட்டிப் பார்த்தோர், வண்டியில் பழம் விற்கும் அக்கா ஆகியோரிடம் வம்பளந்தபடியே வீடு வந்து சேர்ந்தோம்.
நான்காவது ஆண்டாக வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்வைத் தொடர முடிவதில் பெருமகிழ்ச்சி. ஒரு 25 பைசா அட்டை இந்தியா முழுதும் சென்றடைய முடிவது, மாபெரும் சாதனையே.


அஞ்சலம், வங்கி போலாகி, பல்வேறு பணிகள் செய்து, தன் இருப்பை நிலைநாட்ட பெருமுயற்சி எடுத்து வருகிறது. அதனூடே, வாழ்த்து அட்டைகள் பரிமாறும் பழக்கத்தை மேம்படுத்த, அஞ்சல் துறை ஒரு முயற்சி எடுக்கலாம். குறைந்த விலையில் ஓவியங்கள், குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன்கள் விற்கலாம். அஞ்சல் அட்டைகளில் ஓவியம் வரையும் போட்டிகள் நடத்தலாம்.

எல்லா மாற்றங்களும், நம் வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும். நீங்களும் யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புங்கள். முடிந்தால் ஒரு கடிதம் எழுதிப் பாருங்கள். கிறுக்குத் தனமாகத் தோன்றினாலும், எல்லா நேரத்திலும் அதி புத்திசாலியாக இருந்து என்ன ஆகிவிடப்போகிறது? செய்யும் ஓராயிரம் வெட்டி வேலைகளில் கடிதம் எழுதுவதும் இருந்து விட்டுப் போகட்டுமே.

சமீபத்தில் நண்பர் அன்பரசு எனக்கு எழுதும் அஞ்சல் அட்டைக் கடிதங்கள் பெருமகிழ்ச்சி தருகின்றன. எழுத்தைப்போல் அன்பை உணர்த்துவது வேறு எதுவும் இல்லை என்பதை கடிதங்கள் உணர்த்துகின்றன.

பட மூலம் - http://theinspirationroom.com/daily/2007/australia-post-touch/

வியன் எழுதக் கற்றுக் கொண்டான். கடிதம் எழுதும் வழக்கம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

கடந்த வருட வாழ்த்து அட்டைப்பதிவுகளை இங்கே படிக்கலாம்.

https://tshrinivasan.blogspot.com/2020/01/pongal-greeting-cards-2020.html

https://tshrinivasan.blogspot.com/2017/10/greeting-cards-and-celebrations.html


அடுத்த ஆண்டு உங்களுக்கும் வாழ்த்து அட்டை வேண்டுமெனில் உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். (tshrinivasan@gmail.com) நீங்களும் யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புங்கள்.





Thursday, January 16, 2020

பொங்கல் வாழ்த்து அட்டைகள் 2020

மூன்றாவது ஆண்டாக இந்த வருடமும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை உருவாக்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளோம்.

வியன், இயல், அவர்களது நண்பர்கள் மொத்தமாக வரைந்து தள்ளி விட்டனர்.

மொத்தமாக அஞ்சலகத்தில் அஞ்சல் அட்டை வாங்கப்போனால், அவர்களே ஒரு மாதிரியாகப் பார்த்து இல்லை என்று சொல்லி விட்டனர். மறுநாள் அருகில் உள்ள அம்மன் மளிகை கடை அண்ணன் அவரிடம் இருந்த அனைத்து அட்டைகளையும் மகிழ்வுடன் தந்து உதவினார்.

குழந்தைகளுக்கு மிக இனிய நிகழ்வாக இருந்தது. வியன் கிறுக்கல்களில் இருந்து நன்றாக வரையும் நிலைக்கு வளர்ந்துள்ளது மகிழ்வளிக்கிறது.

இயல் முதல்முறையாக தபால் பெட்டியைப் பார்த்து நிறைய கேள்விகள் கேட்டாள். இருவருமே வியப்புடன் தபால் பெட்டியில் வாழ்த்து அட்டைகளைப் போட்டனர்.

அவர்களது பால்ய காலங்களை இனிய தருணங்களால் நிரப்புவதில் எங்களுக்கும் பெரு மகிழ்ச்சி.

அடுத்த ஆண்டு உங்களுக்கும் வாழ்த்து அட்டை வேண்டுமெனில் உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். (tshrinivasan@gmail.com) நீங்களும் யாருக்கேனும் வாழ்த்து அட்டை அனுப்புங்கள்.












Friday, October 20, 2017

வாழ்த்து அட்டைகளும் திருவிழாக்களும்


எனது சிறுவயதில், எல்லாத் திருவிழாக்களும் ஒரு மாதம் முன்பே தொடங்கிவிடும். எல்லாக் கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் தொங்கப்படும். தினமும் பள்ளி விட்டு வீடு வரும்போது, ஒவ்வொரு கடையாக மேய்வோம். எனது நண்பர்கள் பல்வேறு குழுக்களாக இருந்தோம். ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சரத்குமார், சத்யராஜ், பிரசாந்த், குஷ்பு, கௌதமி, பானுப்பிரியா, சுகன்யா என பாரபட்சமின்றி அனைவருக்காகவும் தனிக்குழு வைத்திருத்தோம். இதில் எதிரிக் குழுக்களும் உண்டு. பத்திரிக்கை விளம்பரங்களில் வரும் படங்களைக் கத்தரித்து ரகசிய ஆல்பங்கள் செய்தோம். வாழ்த்து அட்டைகள் தரமான படங்களைத் தந்ததால், அவையே எமக்கு மிகவும் பிடித்தமானவை.

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என அனைவரிடமும் சிறு வேலைகளுக்கும் காசு வாங்குவோம். கடைகளில் தரும் மிச்சத்தை அப்படியே அபேஸ் செய்வோம். எல்லாம் வாழ்த்து அட்டை வாங்கத்தான். பிடித்த நடிகைகள் படம் போட்ட அட்டைகள் அதிகம் கிடைக்காத வருத்தம் வேறு. ஸ்டாம்பு வாங்க, காசு கிடைக்காத காலங்களில், அஞ்சல் அட்டைகளே ஒரே வழி. அதில் கையால் வரைந்து, வாழ்த்துகள் எழுதி அனுப்பி விடுவோம்.

அட்டைகளை மாறி மாறி அனுப்பி மகிழ்வோம். தபால் காரர் தேவதூதனாய்த் தெரிவார். பேனா நட்பு வட்டமும் சேர்ந்து கொள்ள, வீட்டுப்பாடங்களை விட, கடிதம் எழுதும் வேலையில் தினமும் அதிக நேரம் கழியும். அனைவரின் முகவரியும் மனப்பாடமாய்த் தெரியும். நண்பர்களிடமிருந்து வாழ்த்து அட்டைகளும் பக்கம் பக்கமாய் கடிதங்களும் பெறும் மகிழ்ச்சி வேறு எதையும் விட அதிகமானது.

கல்லூரிக் காலத்தில் கணினி அறிமுகமானாலும், ஓரிரு ஆண்டுகள் கடிதங்கள் வழியே வெளியூர் நண்பர்களுக்கு அஞ்சலட்டையில் நுணுக்கி, நுணுக்கி எழுதி மகிழ்ந்தோம். தொலைபேசியின் வருகை  கடிதங்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. இணையம் வந்தது, யாஹூ சாட் வந்தது. கடிதங்கள் வருவது நின்றே போனது. எல்லாத் திருவிழாக்களுக்கும் மின்னஞ்சல் மூலமே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

ஸ்மார்ட்போன் வந்து, மின்னஞ்சல் எழுதுவது நின்றது. பேசுவது கூட நின்றே போனது. வாட்சப் செய்தி மட்டுமே தொடர்பு கொள்ளும் வழி என்றானது. நமது எண் மட்டுமே தெரியும் காலமாகிப் போனது.

என் மகன் வியன். மூன்றரை வயது. கூடுமான வரை டிஜிட்டல் ஆதிக்கம் இல்லாமல் வளர்க்க முயல்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி இல்லை. என்னிடம் ஸ்மார்ட்போனும் இல்லை. நித்யா கண்டிப்புடன் அவனிடம் போன் தருவதில்லை. புத்தகங்கள், கதைகள், ஓவியங்கள், புதுப்புது குட்டி பொம்மைகள், புதுப்புது விளையாட்டுகள் என்றே வாழ்கிறோம். சுவரெங்கும் ஓவியங்கள், நோட்டுப் புத்தகங்கள் எங்கும் கிறுக்கல்கள். சில நேரங்களில் உடைகளில் கூட. என்ன, புதுக்கதைகள் சொல்ல, நம் மூளையை அதிகம் கசக்க வேண்டியிருக்கிறது.
 
இந்த தீபாவளியை வாழ்த்து அட்டைகளோடு கொண்டாட முடிவு செய்தோம். அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கினோம். ஒரு அட்டை 50 பைசாதான். இந்தியா முழுதும் போகும். 30 ரூபாய்க்கு 60 அட்டைகள். ஒரு வாரத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்த்து அட்டைகள் வரைந்து தள்ளி விட்டான்.




      
60 பேரின் முகவரிக்கு எங்கே போவது? அப்போதுதான் உணர்ந்தோம். யாருடைய முகவரியும் எங்களிடம் இல்லை. நண்பர்களுக்கு முகவரி கேட்டு செய்தி அனுப்பினால், 'ஏன்? எதற்கு?' என்று கேள்விகள் மட்டுமே பதிலாய். ஒரு திடீர்ப் பரிசுக்கு நாம் யாருமே தயாரில்லை போல. சிலர் போன் செய்தே கேட்டனர். ஏதாவது சொல்லி, சமாளித்து முகவரி வாங்கினேன். தம்பி சுரேஷ் உறவினர் முகவரிகள் சேகரித்தான். ஒரு வழியாக எல்லோர் முகவரியும் பெற்று அட்டைகளை அனுப்பி வைத்தோம். சுபம்.









நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் பெயருக்கே முகவரி எழுதினோம். அவர்கள் பெறும் முதல் வாழ்த்து அட்டை இதுவாகத்தான் இருக்கும். வாழ்த்து அட்டைகளைப் பெற்றோர், போனில் அழைத்துப் பாராட்டினர்.

இனிய தருணங்களையும், அற்புதமான. நினைவுகளையும் உருவாக்குவதற்குத்தானே திருவிழாக்கள். வாழ்த்து அட்டைகள் எழுதுவோருக்கும், பெறுவோருக்கும் இனிமையைத் தருகின்றன. நீங்களும் அடுத்த திருவிழாவிற்கு வாழ்த்து அட்டைகள் உருவாக்கிப் பாருங்கள். டிஜிட்டல் உலகம் தர இயலாத, பெருமகிழ்ச்சியைப் பிறர்க்குத் தந்து, நீங்களும் அடைவீர்கள்.


பட மூலம் - http://theinspirationroom.com/daily/2007/australia-post-touch/

Monday, May 12, 2014

வியன்

எமது குட்டி இளவரசனுக்கு 'வியன்' என்று நற்றமிழில் பெயர் சூட்டியுள்ளோம். வியப்பானவன், பரந்த மனம் கொண்டவன் என்று பொருள்.

கதிர், நன்னன், புகழ், நிலவன், முகில், வெற்றி, நற்கோ, வளவன், அகரன், கவின், மாலன், செழியன், இனியன், பாரி, எழிலன் - யோசித்த பிற பெயர்கள்.

peyar.in தளம் வெகு உதவியாக இருந்தது.

சிறப்பான பெயர்களை அறிமுகம் செய்த CR செல்வகுமார் ஐயாவிற்கும் நண்பர் பொற்கோ அவர்களுக்கும் நன்றிகள்.